சிகரம் நோக்கி தொடரும் பயணம் மதியழகன் சுப்பையா
இரு மொழிகளின் ஒப்புமைகள் அந்த இரு நாட்டு மக்களின் நட்புச் சிந்தனையை ஏற்படுத்துகிறது. மொழியாக்கம் என்பது ஒரு விதத்தில் உருவாக்கம்கூட. மொழி பெயர்ப்பை மதிப்பீடு செய்ய அளவுகோல் கிடையாது.
Cat killed rat
இதன் பொருள் (1) பூனை எலியைக் கொன்றது.
(2) எலியைக் கொன்றது பூனை.
மேற்கண்ட இந்த இரண்டு மொழி பெயர்ப்பும் ஒரு பொருள் தருபவை. ஆனால் முன்னது இலக்கண மரபுப்படி அமைந்த வாக்கியம் இரண்டாவது ஆங்கிலத்தின் வரி பிரழாத மொழி பெயர்ப்பு. முன்னது போல் இருக்க வேண்டுமென்று வாதிடவில்லை. ஆனால் முன்னது போல் இருப்பின் வாசிக்கவும் புரியவும் எளிமையானது.
பின்னது புரிந்து கொள்ள முடிந்தாலும் ஏதோ ஒரு சிறு நெருடல் உள்ளது. உதாரணத்திற்காக எளிய வாக்கியமொன்றை எடுத்துக் கொண்டேன். இவ்வாறு நீண்ட அல்லது கலவை வாக்கியங்களை நேரடி மொழிபெயர்ப்புச் செய்கையில் அவை புரிய சிரமமாக இருப்பது மட்டுமல்லாது நகைப்புக்குரியதாகவும் ஆகி விடுகிறது.
கவிதை மொழி சுண்ட காய்ச்சியது. மொழி ஏற்கனவே மிக தேர்ந்த சொற்களால் அமைக்கப் பட்டிருக்கும். அதை பிற மொழியில் பெயர்க்கையில் மிகுந்த கவனமும் சிரத்தையும் மேற்கொள்ள வேண்டி வரும். ஆனால் பலர் இதில் பிசகி விடுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் பாஷோ. பூஸன், இஸ்ஸா மற்றும் ஷிகி ஆகிய நால்வரின் தலா நூறு ஹைக்கூக்களை எடுத்து மொழி பெயர்த்து தந்துள்ளார் கவிஞர் அமரன்.
நூல் தயாரிப்பும் உள்ளடக்கமும் வியக்க வைக்கிறது. பக்கத்துக்கு பக்கம் உழைப்பு திரண்டு கிடக்கிறது. என் மதிப்பீட்டில் இதனை ஒரு சாதனை என்றே குறிப்பிடுவேன்.
The year-end Fair
I would like to go out and buy
Some incense sticks
ஆண்டிறுதித் திருவிழா
நானும் வெளியே நடந்து போய்
வாங்கணும் ஊதுபத்தி
இந்த கவிதைகயில், நானும் வெளியே போய் என்று மட்டும் இருந்தால் போதும் ‘நடந்து' என்பது மூலத்தில் குறிப்பிடப்படவில்லை. வெளியே போய் என்பதில் அவர் நிச்சயம் எழுந்து/நடந்துதான் போவார் என்பது புரியப்படுகிறது. மேலும் “Fair” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "திருவிழா' என்பது மட்டுமல்ல "சந்தை / பொருட்காட்சி' என்றும் கூட பொருளாகிறது.
கவிதைகளை இனம் பிரித்து தந்திருப்பதும் ஒவ்வொரு கவிதையிலும் அவர் தங்கி / ஆழ்ந்து / ஆய்ந்த / அனுபவித்து மொழி பெயர்த்திருப்பதும் கவிதை கனத்தை சுமக்கையில் உணர முடிகிறது. "ஆன்ம நேயன் பாஷோ' என பாஷோவின் ஹைக்கூக்கள் குறித்து வகைப்படுத்தி உதாரணங்களுடன் ஒரு ஆய்வு தேற்றக் குறிப்பாய் கொடுத்திருப்பது அமரனின் உழைப்புக்கு மற்றொரு சான்று.
இன்று மொழிபெயர்ப்புத் துறை மலினப்பட்டுப் போய் கிடக்கிறது. சமீபத்தில் தொலைக் காட்சியொன்றில் கண்ட விளம்பரத்தில் எங்கள் கம்பெனியின் தைலத்தை தடவினால் தலைவலி என்ற பெயரை மறந்து வீடுவீர்கள் என்ற வாசகம் பின்னணியில் ஒலிக்கிறது. "தலைவலி என்றச் சொல்லை' அல்லது "தலைவலி என்ற வார்த்தையை' என்றுதான் அது இருந்திருக்க வேண்டும்.
விளம்பரங்கள் வரும் போகும் ஆனால் இலக்கியப் படைப்புகள் காலகாலத்திற்கும் நிலைக்கக் கூடியவை. மேலும் பலரால் வாசிக்கப்பட்டு பின்பற்றபடக் கூடியவை. அவற்றை மொழி பெயர்க்கையில் அதிக கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாய் கவிதை மொழி பெயர்ப்புக்கு கவிதையையும் தாண்டி நிறைய தெரிந்திருக்க வேண்டும். கவிஞரின் மனநிலை, அவர் வாழ்ந்த காலகட்டம், அன்றைய அரசியல், என அனைத்தையும் தெரிந்து தெளிவது அவசியமாகி விடுகிறது.
சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு தப்பித்து விடுகிறார்கள் சிலர். மொழியாக்கம் வேறு மொழிபெயர்ப்பு வேறு எனக் கூறப்படுகிறது. இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மூலம் ஒன்றுதானே. மொழியாக்கத்தில் கொஞ்சம் சுதந்திரம் இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் மூலப் படைப்பு சிதைந்து விடுகிறது.
கொல்கத்தாவில் மற்றும் வட மாநிலங்களில் சந்தேஷ் என்ற இனிப்பு பலகாரம் கிடைக்கிறது. மூலத்தில் ஒருவன் ‘சந்தேஷ்' சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக குறிப்படப்பட்டிருந்தால் மொழியாக்கமோ மொழி பெயர்ப்போ அதிலும் ‘சந்தேஷ்' என்று தான் குறிப்பிடப் பட வேண்டும் அதற்காக ஒருவகை இனிப்பு என்றோ அல்லது மிட்டாய் என்றோ ‘லட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்' என்றோ குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல. ஆனால் இதைத்தான் மொழியாக்கம் என்று தப்பித்து விடுகின்றனர். பெரும்பாலும் பெயர்ச் சொற்களுக்கான இணைச் சொற்கள் இல்லையெனில் அவை மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.
I heard the unblown flute
In the deep tree shade
Of the temple of Suma
எவருமிலையெனினும்
குழலோசைகேட்கும் மரநிழல்
பிருந்தாவனக்கோவில்
மூலத்தில் "சும தீவு' என்பதை தமிழர்களுக்காக ‘பிருந்தாவனம்' என்று மாற்றியிருக்கிராறாம் மொழிபெயர்ப்பாளர். ஆனால் இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? சிகரம் நோக்கியப் பயணத்தின் போது சறுக்கல்கள் சகஜம்தானே. கவிஞர் அமரனும் பல இடங்களில் சறுக்கி இருக்கிறார். செங்குத்து சிகரமாயிற்றே கட்டாயம் சறுக்கத்தான் வேண்டும். ஆனால் சிகரம் தொட்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை இந்த ஈடுபாடன உழைப்புக்கு வாழ்த்துகளைச் சொல்லலாம்.
ஜப்பானிய ஹைக்கூ 400 நால்வர் நானூறு
கவிஞர் அமரன்
காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை. ரூ. 100/
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|